பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக ராணுவம் மற்றும் உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் இடையே மோதல்கள் தீவிரமாகி வருகின்றன. கடந்த 12ஆம் தேதி கலாட் மாவட்டத்தில் நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்த நிலையில், அதற்கு பதிலடியாக பலுசிஸ்தான் குடியரசு படையினர் தகவல் தொடர்பு கோபுரம் மற்றும் எரிவாயு குழாய்களை சேதப்படுத்தினர். தொடர்ந்து நடந்த தாக்குதல்களில் இரண்டு பாகிஸ்தான் வீரர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில், பலுசிஸ்தான் தேசியவாத தலைவர் மிர் யார் பலூச் வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தான் ராணுவம் பீரங்கிகள் மற்றும் வெடிகுண்டுகளை பயன்படுத்தி சுமார் 40 மசூதிகளை இடித்து தரைமட்டமாக்கியதாக குற்றம் சாட்டினார். மசூதிகள் மீது தாக்குதல், குர்ஆன் எரிப்பு, இமாம்கள் கடத்தல் போன்ற குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்தார். இதன் மூலம் சிறுபான்மையினர் உரிமைகள் குறித்து பாகிஸ்தான் பேசுவதற்கு தகுதி இல்லை என்றும், சொந்த மக்களையே ஒடுக்கும் அரசு பிறருக்கு பாடம் கற்பிக்க முடியாது என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

