பக்தர்கள் வழங்கும் கோயில் நிதி, தமிழ்நாடு அரசின் மாநில வளர்ச்சி திட்டங்களில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, அரசு திட்டங்களுக்கு கோயில் நிதியை பயன்படுத்துவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும், இதுகுறித்து வழக்குகள் நீதிமன்றங்களில் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக, கோயில் நிதியில் வணிக வளாகம், கல்வி நிறுவனம், திருமண மண்டபங்கள் அமைக்கப்படும் அறிவிப்பை ரத்து செய்யும் உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கியது. இதேபோல், சென்னை கபாலீஸ்வரர் கோயில் நிதியை கல்விக்காக பயன்படுத்தும் அறிவிப்புக்கு எதிராக டி.ஆர்.ரமேஷ் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து மேல்முறையீடு செய்யப்பட்டு உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்டிருந்தது. அதில் தமிழ்நாடு அரசு தரப்பின் வாதங்களை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், “கோயில் நிதியை கல்விக்காக பயன்படுத்துவதில் எந்தவித தவறும் கிடையாது. அதற்கு தடையும் இல்லை. இது மக்களுக்கான திட்டம் தானே. குறிப்பாக மனுதாரர் குறிப்பிட்டுள்ள கோயிலில் மட்டும் ரூ.3லட்சத்திற்கும் மேல் வருமானம் வருகிறது. இதனை கோயில் மற்றும் கல்விக்காக ஏன் பயன்படுத்தக் கூடாது?, இது மாணவர்களின் எதிர்காலத்திற்கான ஒன்றாகும். குறிப்பாக இதுபோன்ற தேவையில்லாத மனுக்களை பக்தர்களாக இருக்கும் நீங்கள் தாக்கல் செய்ய முகாந்திரமே கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், டி.ஆர்.ரமேஷ் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

