பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கைவிடப்படும்என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
பேரவையில் 110-வது விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை முதல்வர் விஜய் நேற்று வெளியிட்டார். அதன் விவரம்: இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால் இயக்கப்படும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் ஆண்டுக்கு 3 கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக உள்ளது.
வளர்ந்துவரும் சென்னை மாநகரத்தின் தேவை, பயணிகள் வசதி, தொழில் வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டும், சரக்குப் போக்குவரத்தை அதிகரிக்கவும் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான தேவை ஏற்பட்டுள்ளது. அதற்கு தேர்வு செய்யப்படும் இடம் பெரிய அளவில் விவசாயிகளை பாதிக்காத, அதிக அளவில் குடியிருப்புகளை அகற்றாத வகையில் அமைய வேண்டும்.
ஆனால், முந்தைய அரசு விவசாயிகளை பெரிய அளவில் பாதிக்கும் வகையிலும், குடியிருப்புகளை அதிக அளவில் அகற்றும் வகையிலும் விமான நிலையத்தை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் மற்றும் இதர கிராம மக்கள் இந்த விமான நிலையம் அமைப்பதை எதிர்த்து நடத்திய போராட்டங்களை அறிந்து, நான் கடந்த 2025 ஜன.20-ம் தேதி அங்கு சென்று, மக்களின் குறைகளைக் கேட்டறிந்தேன்.
பின்னர், ‘‘சென்னை பரந்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 12 கிராமங்களில் அமைய இருக்கும் விமான நிலையத்தை எதிர்த்துப் போராடும் மக்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன். நீண்ட நாட்களாக இத்திட்டத்துக்கு எதிராகப் போராடிவரும் விவசாயிகளுக்கு எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விக்கிரவாண்டியில் கடந்த 2024 அக்டோபரில் நடந்த பொதுக் கூட்டத்திலேயே, பரந்தூர் விமான நிலையத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளேன். தொழில் வளர்ச்சி மற்றும் அதில் விமான நிலையங்களின் பங்குபற்றி நான் நன்கு அறிவேன்.
எனினும், பரந்தூரில் இத்திட்டம் அமையக் கூடாது. அரசு இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காமல், விவசாய நிலங்கள் அதிக அளவில் பாதிக்கப்படாத வகையில் மாற்று இடம் தேர்வு செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தேன்.
இந்த நிலையில், புதிய விமானநிலையம் அமைப்பது குறித்து உயர் அதிகாரிகள், துறை வல்லுநர்களிடம் விரிவாக ஆலோசனை நடத்தினேன். ஏற்கெனவே நான் உறுதி அளித்தபடி, பரந்தூரில் புதியவிமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்த அரசால் கைவிடப்படும்.

