40 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி நியூசிலாந்து செல்கிறார். ராஜீவ் காந்திக்குப் பின் இந்திய பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது.
பிரதமர் மோடி ஆறு நாட்கள் அரசு முறைப் பயணமாக இந்தோ – பசிபிக் நாடுகளுக்கு வரும் 6ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்குச் செல்லும் பிரதமர் மோடி வரும் 11ஆம் தேதி நாடு திரும்ப திட்டமிட்டுள்ளார். குறிப்பாக, வரும் 10ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நியூசிலாந்து செல்லவிருப்பது வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடைசியாக 1986ஆம் ஆண்டு பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி நியூசிலாந்து சென்றிருந்தார். இதனால், 40 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து செல்லும் இந்திய பிரதமரின் முதல் பயணம் என்ற வரலாற்றுச் சிறப்பைப் பெறுகிறது. பிரதமர் மோடியின் நியூசிலாந்து வருகை குறித்து எக்ஸ் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன், பிரதமர் மோடியின் வருகைக்காக ஆவலோடு காத்திருப்பதாகக் கூறியுள்ளார்.
இந்தியா, உலகின் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ள அவர், நியூசிலாந்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நாடு என்றும் இந்தியாவை சுட்டிக்காட்டியுள்ளார்.

