ஆப்ரேஷன் சிந்தூரின் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் இந்தியா மேல் குறிவைக்கும் சில நகரங்களில் சண்டிகர் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, சண்டிகர் நகரத்தின் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சண்டிகரில் ஏர் சைரன்கள் மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், சண்டிகரில் மருந்து கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் இன்று இரவு 7 மணிக்குள் மூட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வான்வழித் தாக்குதல் நடக்க வாய்ப்பு இருப்பதால், இன்று (மே 9) காலை 9:30 மணியளவில் சண்டிகரில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலிக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நகரம் முழுவதும் சைரன்கள் ஒலிக்கின்றன, மக்கள் அனைவரும் வீட்டுக்குள் இருக்க வேண்டும், பால்கனிகளில் நிற்க கூடாது என சண்டிகர் துணை ஆணையர் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், வட மேற்கு எல்லையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையால், வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு 2 மாதங்களுக்கு அமல்படுத்தப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவு 163 இன் கீழ் இரவு ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது.

