இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 பேர் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் நியமன எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு 9 நியமன எம்.பி.க்களை தேர்வு செய்வது வழக்கம். இவர்கள் அனைவரையும் முன்னாள் அவைத் தலைவர் சுவான் ஜின் தலைமையிலான சிறப்பு தேர்வுக் குழு தேர்ந்தெடுக்கும். அந்த வகையில், இதற்காக 30 பேரின் பெயர்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அவர்களில் 9 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நியமன எம்.பி.க்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 9 பேரையும் இரண்டரை ஆண்டு பதவிக் காலத்துக்கு சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகோப், வரும் 24ஆம் தேதி நியமனம் செய்வார். அவர்கள் அனைவரும் ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றம் கூடும்போது பதவியேற்பார்கள். இந்த 9 நியமன எம்.பி.க்களில் 3 பேர் இந்திய வம்சவாளியைச் சேர்ந்தவர்களாவர்கள் ஆவர்.
சிங்கப்பூர் இந்திய தொழில் வர்த்தகக் கூட்டமைப்பின் தலைவர் நிமில் ரஜினிகாந்த் பரேக், ப்ளூரல் ஆர்ட் பத்திரிகையின் இணை நிறுவனர் சந்திரதாஸ் உஷா ராணி, வழக்கறிஞர் ராஜ் ஜோஷுவா தாமஸ் ஆகியோர் ஆவர்.
நியமன எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 60 வயதாகும் நிமில் ரஜினிகாந்த் பரேக், பெகாசஸ் ஆசியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். அவர் சிங்கப்பூரில் 17 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
42 வயதாகும் சந்திரதாஸ் உஷா ராணி, முதல் முறையாக எம்.பி. பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் கடந்த 12 ஆண்டுகளாக வரி விவகாரங்கள் தொடர்பான வழக்குகளை நடத்தும் வழக்கறிஞராக இருந்து வருகிறார்.
43 வயதாகும் ராஜ் ஜோஷுவா தாமஸும் ஒரு வழக்கறிஞர் ஆவார். இவர் தற்போது இரண்டாவது முறையாக நியமன எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் சிங்கப்பூர் பாதுகாப்பு சங்கத்தின் (எஸ்ஏஎஸ்) தலைவராக உள்ளார்.
