கொடைக்கானல் மற்றும் ஊட்டி சுற்றுலாத் தலங்களுக்கு வருவதற்கு இ-பாஸ் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் பலர் ஏற்காடு வரத் தொடங்கியுள்ளனர்.
வெயிலின் தாக்கத்தில் இருந்த சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக, குளிர்ச்சியான தட்ப வெப்பம் கொண்ட சுற்றுலாத் தலங்களுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக, ஊட்டி, கொடைக்கானல் ஆகிய இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் மிகவும் அதிக எண்ணிக்கையில் வருவதால், அங்கு கூட்டமும், போக்குவரத்து நெருக்கடியும் அதிகரித்து, இ- பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.
இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் தடையின்றி வந்து செல்லக் கூடிய சுற்றுலாத் தலங்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, ஏற்காடு சுற்றுலாத் தலத்துக்கு கடந்த சில நாட்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. ஞாயிறு விடுமுறை நாளான நேற்றும் ஏற்காட்டில் குடும்பம் குடும்பமாக சுற்றுலாப் பயணிகளைக் காண முடிந்தது.
சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், ஏற்காட்டில் சுற்றுலா சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
பழங்கள் மற்றும் சாக்லேட் விற்பனை அதிகரிப்பு, உணவகம், விடுதிகளில் குவியும் சுற்றுலாப் பயணிகள், சிறுவர்களுக்கான பொம்மைகள் விற்பனை என சுற்றுலாத் தொழில் களைகட்டுவதால், உள்ளூர் மக்களும் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.

