இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகள் அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் சார்பில் ஸ்டீபன் டுஜாரிக் கூறியதாவது, ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுடன் எந்த நேரடித் தொடர்பும் வைத்திருக்கவில்லை. இருப்பினும், அவர் நிலைமையை மிக நெருக்கமாகவும், மிகுந்த அக்கறையுடனும் கண்காணித்து வருகிறார். காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு நாங்கள் தெளிவாகக் கண்டனம் தெரிவித்துகொள்கிறோம், இதில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.எனினும், அதிகபட்ச நிதானத்தை இரு நாடுகளும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், நிலைமை மேலும் மோசமடையாமல் இருக்கவும், பாகிஸ்தான் மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையிலான எந்தவொரு பிரச்சினையும், அர்த்தமுள்ள மற்றும் பரஸ்பர ஈடுபாட்டின் மூலம் அமைதியாக தீர்க்கப்பட வேண்டும் என ஐ.நா வலியுறுத்தியுள்ளது.

