ஈரானுடன் வர்த்தகம் மேற்கொண்ட 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா அரசு தடை விதித்துள்ளது.
மத்திய கிழக்கு கடல் பகுதிகளில் மோதலை தூண்டுவதற்கும், அமெரிக்காவிற்கு எதிராக செயல்படுவதற்கும் ஈரான் நிதியுதவி செய்து வருவதாக டிரம்ப் குற்றம்சாட்டினார். இதனால், ஈரானுடன் யாரும் வர்த்தகம் மேற்கொள்ளக் கூடாது என்று கூறிய டிரம்ப், மீறி வர்த்தகம் செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், தனது எச்சரிக்கையை மீறி ஈரானிடம் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களை வாங்கிய 20 நிறுவனங்கள் அமெரிக்காவில் வர்த்தகம் செய்ய டிரம்ப் தடை விதித்துள்ளார். அதில், இந்தியாவை சேர்ந்த காஞ்சன் பாலிமர்ஸ், அல்கெமிக்கல் சொலியூஷன், ராம்னிக்லால் எஸ் கோசாலியா என்ட் கோ, ஜூபிடர் டை கெமிகல், குளோபல் இன்டஸ்ட்ரியல் கெமிக்கல்ஸ், பெர்சிஸ்டன்ட் பெட்ரோகெம் உள்ளிட்ட 6 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
இதே போன்று, துருக்கி, இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்களுக்கும் அமெரிக்கா தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

