விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் வென்று சாதனை படைத்துள்ளார். இறுதிப் போட்டியில் 7 முறை சாம்பியனும், 23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.
லண்டனில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 36வயதான ஜோகோவிச்சை, 20 வயதான அல்காரஸ் எதிர்கொண்டார். பிரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜோகோவிச், முதல் செட்டை 6க்கு1 என்ற செட்டில் கைப்பற்றினார்.
இதனால், இறுதிப் போட்டியில் ஜோகோவிச் எளிதாக வென்றுவிடுவார் என ரசிகர்கள் நினைத்த நிலையில், அல்காரஸ் அனைவருக்குமே அதிர்ச்சி வைத்தியம் அளித்தார், அவர் ஏன் 20 வயதில், தரவரிசையில் முதலிடத்தை பிடித்தார் என்பதை அனைவருக்கும் இன்று உணர்த்தினார்.
எனினும் ஜோகோவிச் தன்னுடைய அனுபவத்தையும், சக்தியையும் திரட்டி 4வது செட்டில் 6க்கு3 என்ற கணக்கில் தனதாக்கினார். இதனால் சாம்பியனை தீர்மானிக்கும் கடைசி செட் வரை ஆட்டம் சென்றது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் கடைசி செட்டை 6க்கு4 என்ற கணக்கில் கார்லோஸ் கைப்பற்றினார். 4 மணி நேரம் 42 நிமிடம் நீடித்த இந்தப் போட்டியில் கார்லோஸ் அல்காரஸ் 1க்கு6, 7க்கு6,6க்கு1,3க்கு6,6க்கு4 என்ற கணக்கில் வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார்.
ஜோகோவிச், ஒரு வெறி பிடித்த நபர் போல் ஆக்ரோஷமாகவும், சில சமயம், தன்னுடைய மேஜிக்கை வெளிப்படுத்தினார். ஆனால், ஜோகோவிச்சுக்கு கார்லோஸ் அல்காரஸ், சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். 2வது செட்டை அல்காரஸ் 7க்கு6 என்று கைப்பற்றிய நிலையில், 3வது செட்டை 6க்கு 1 என்று எளிதில் வென்றார்.
இதன் மூலம் தொடர்ந்து 4 முறை விம்பிள்டன் பட்டத்தை வென்ற ஜோகோவிச்சின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் வெற்றி பெற்ற ஆல்காரஸ்க்கு இந்திய ரூபாய் மதிப்பில் 25 கோடியே 25 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. வெற்றிக்கு பிறகு பேசிய அல்காரஸ், ஜோகோவிச்சை பார்த்து தான் டென்னிஸ் விளையாட தொடங்கியதாகவும், அவரை வீழ்த்தியது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.
ஜோகோவிச் பேசும் போது, தாம் தோற்க வேண்டிய பல சாம்பியன் பட்டங்களை வென்று இருப்பதால், இன்று வெல்ல வேண்டியதை தோற்றுவிட்டேன், இதனால் இரண்டும் சமம் ஆகிவிட்டது என்று கூறினார். மேலும், தனது மகன் குறித்து பேசும் போது ஜோகோவிச் கண்ணீர் சிந்தினார்.
