மகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்; பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அசத்திய இந்திய மகளிர் அணி

அரபு நாடுகள் இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் பாகிஸ்தான் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. துபாயில் இன்று நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
மகளிருக்கான உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்டது.
இந்த மேட்ச்சில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, 58 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் தனது 2 ஆவது ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை இன்று எதிர்கொண்டது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இந்திய வீராங்கனைகளின் அற்புதமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் பேட்டர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்தனர்.
20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 105 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நிதா டார் 28 ரன்களும், முனீபா அலி 17 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் அருந்ததி ரெட்டி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்டர்கள் களம் இறங்கினர். தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 7 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.
அடுத்து இணைந்த ஷபாலி வர்மா – ஜெமிமா ரோட்ரிகஸ் இணை பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இருவரும் 2 ஆவது விக்கெட்டிற்கு 43 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
ஷபாலி 32 ரன்கள் சேர்க்க, ஜெமிமா 23 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 29 ரன்கள் சேர்க்க 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 108 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *