அபார பவுலிங் திறமையால் இங்கிலாந்து அணியை பணிய வைத்த இந்தியா; அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது

இங்கிலாந்து இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான 29வது லீக் போட்டி லக்னோ மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங் செய்வதாக அறிவித்தார். இரு அணிகளிலும் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. இந்த உலகக் கோப்பையில் இதுவரையில் இந்தியா விளையாடிய 5 போட்டிகளிலும் சேஸிங் மட்டுமே செய்துள்ளது. தற்போது இந்தப் போட்டியில் முதல் முறையாக பேட்டிங் செய்தது.
இன்றைய போட்டியின் 4வது ஓவரின் கடைசிப் பந்தில் சுப்மன் கில் கிறிஸ் வோக்ஸ் பந்தில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இவர் 13 பந்தில் 9 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி டேவிட் வில்லி பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
தொடர்ந்து 12வது ஓவரில் 4 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்ரேயஸ் ஐயர் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவரது விக்கெட்டினை கிறிஸ் வோக்ஸ் கைப்பற்றினார். இந்திய அணி 30 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.
கே.எல். ராகுல் தனது விக்கெட்டினை 58 பந்தில் 39 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறியுள்ளார்.
ரோகித் சர்மா சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து 87 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவரை தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா 8 ரன்களில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 41.2 ஓவர்களில் முகமது ஷமி ஒரு ரன் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்தார்.
45 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டினை இழந்து 195 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது. பின்னர் 46.2 ஓவர்களில் சூர்ய குமார் யாதவ் 49 ரன்கள் எடுத்தநிலையில் ஆட்டம் இழந்தார். இறுதியாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது.
இதனால் இங்கிலாந்து அணி 230 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் சற்று அடித்து ஆட எத்தனித்த நேரத்தில் டேவிட் மேலனை அவுட் செய்து பும்ரா அதிர்ச்சி கொடுத்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து இங்கிலாந்து ரசிகர்கள் மீளும் முன்னர் அடுத்த பந்திலேயே ஜோ ரூட்டை டக்கவுட் செய்து பெவிலியன் திரும்ப செய்தார் பும்ரா.
இதனை அடுத்து இங்கிலாந்து வீரர்கள் நிதான ஆட்டத்தை கையாண்ட நிலையில், மூன்றாவது விக்கெட்டுக்கு களம் கண்ட பென் ஸ்டோக்சும் டக் அவுட் ஆகினார். இதனை அடுத்து தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கியிருந்த ஜானி பெர்ஸ்டோவும் 14 ரன்களில் முகமது ஷமி பந்தில் நடையை கட்டினார். இதனை அடுத்து களம் இறங்கியவர்களும் அரை சதத்தை கூட தொட முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர்.
இறுதியாக 34 ஓவர்கள் 5 பந்துகள் நிறைவடைந்த நிலையில், இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 129 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், ரவீந்தர ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனால் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை பந்தாடி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், இந்த தொடரில் விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளது இந்தியா. மேலும் புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகள் பெற்று, அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது இந்திய அணி.
நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி இந்த தோல்வியின் மூலம், அரையிறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. மேலும் உலகக் கோப்பைகளில் தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்திப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *