மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்நிலையில், வீரர்கள் இல்லாமல் விண்கலனை விண்வெளிக்கு அனுப்புவதற்கான சோதனைக்கலன் தயாரிப்பதற்கான பணிகள் இன்று ஸ்ரீஹரிக்கோட்டாவில் தொடங்கியுள்ளன. இந்த திட்டத்தின் ஆரம்ப கட்ட முயற்சிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. வீரர்களை அனுப்புவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு, பல்வேறு கட்டங்களில் சோதனைகள் நடத்தப்படுகின்றன. வீரர்கள் பயணிக்கும் கலனை தனியாக விண்வெளிக்கு அனுப்பி, அதை பாதுகாப்பாக கடலில் தரை இறக்குவதற்கான மீட்பு ஒத்திகைகள் போன்ற பணிகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. அடுத்த கட்டமாக, வீரர்கள் இல்லாமல், சோதனை அடிப்படையில் வெறும் விண்கலனை விண்வெளிக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதற்கான முழுமையான விண்கலனை அசெம்பிளி செய்யும் பணிகள் இன்று ஸ்ரீஹரிக்கோட்டாவில் தொடங்கியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ககன்யான் திட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே, இதற்கான பூர்வாங்க பணிகள் இஸ்ரோவால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று காலை 8:45 மணிக்கு இதற்கான பணிகள் தொடங்கப்பட்டதாகவும், வீரர்களுக்கான கலனை ஒருங்கிணைக்கும் பணிகள் பெங்களூரு மையத்தில் மற்றும் சர்வீஸ் மாட்யூல் எனப்படும் சேவை கலனை ஒருங்கிணைக்கும் பணிகள் திருவனந்தபுரம் மையத்தில் நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

