மார்ச் 2025-ல் முடிவடைந்த கடந்த 12 மாதங்களில் இந்தியாவில் மட்டும் ஆப்பிள் நிறுவனம் 22 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐபோன்களை தயாரித்துள்ளதாக ப்ளூம்பெர்க் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட கிட்டத்தட்ட 60 சதவீதம் அதிகமாகும். ஆப்பிள் நிறுவனம் தற்போது அதன் மொத்த ஐபோன்களில் 20 சதவீதத்தை அல்லது ஐந்தில் ஒன்றை இந்தியாவில் அசெம்பிள் செய்கிறது என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
ஐபோன் உற்பத்தியில் சீனாவை நம்பியிருப்பதைக் குறைப்பதற்கான ஆப்பிளின் நீண்டகால முயற்சியாக இதைப் பார்க்கலாம். மார்ச் 2025-ல் முடிவடைந்த நிதியாண்டில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவிலிருந்து ரூ.1.5 டிரில்லியன் மதிப்புள்ள ஐபோன்களை ஏற்றுமதி செய்ததாக இந்தியாவின் ஐடி மற்றும் மின்னணுவியல் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பெரும்பாலான ஐபோன்கள் தமிழ்நாட்டில் உள்ள ஃபாக்ஸ்கானின் தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்படுகின்றன. மற்ற இரண்டு தொழிற்சாலைகள் – ஒன்று தமிழ்நாட்டிலும், மற்றொன்று கர்நாடகாவிலும் டாடா குழுமத்தால் நடத்தப்படுகின்றன. வளர்ந்து வரும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி தேவையை பூர்த்தி செய்ய ஆப்பிள் தற்போது இந்த மூன்று தொழிற்சாலைகளை நம்பியுள்ளது.
தற்போதைக்கு இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் கூடுதல் இறக்குமதி வரிகளுக்கு உட்பட்டவை அல்ல. இது ஆப்பிள் நிறுவனத்திற்கு இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க தெளிவான ஊக்கத்தை அளிக்கிறது.
2020-ம் ஆண்டில் அரசாங்கத்தின் உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டத்தின் கீழ் முதன்முதலில் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் உற்பத்தியைத் தொடங்கியபோது, அதன் சாதனங்களில் உள்ளூர் உள்ளடக்கம் ஐந்து முதல் எட்டு சதவீதம் வரை மட்டுமே இருந்தது. அந்த எண்ணிக்கை இப்போது பல மாடல்களுக்கு தோராயமாக 20 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் முதன்முதலில் 2017-ம் ஆண்டு ஐபோன் SE மாடலை இந்தியாவில் அசெம்பிள் செய்யத் தொடங்கியது. இத்தனை ஆண்டுகளில் ஐபோன் 12, ஐபோன் 13, ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ் மற்றும் ஐபோன் 15 போன்ற மாடல்கள் வரை உற்பத்தி விரிவடைந்துள்ளது.
இருப்பினும், ஆப்பிள் நிறுவனம் இதுவரை இந்தியாவிற்கு வெளியேதான் அதன் பிரீமியம் ப்ரோ மாடல்களின் உற்பத்தியை வைத்திருக்கிறது. 2024ம் ஆண்டின் பிற்பகுதியில்தான், முதன்முறையாக ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸில் தொடங்கி – இந்தியாவில் ப்ரோ மாடல்களையும் தயாரிக்கத் தொடங்கியது.

