உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, மே 10-ம் தேதி வரை நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சித்திரை திருவிழா ஏப்ரல் 28-ம் தேதி வாஸ்துசாந்தியுடன் தொடங்கும், மேலும் ஏப்ரல் 29-ம் தேதி (சித்திரை 16) செவ்வாய்க்கிழமை காலை 10.35 மணிக்கு மிதுன லக்கனத்தில் கொடியேற்றம் நடைபெறும். மே 6-ம் தேதி (சித்திரை 23) செவ்வாய்க்கிழமை மீனாட்சிஅம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும்.மே 7ம் தேதி (சித்திரை 24) புதன்கிழமை, மீனாட்சி அம்மனுக்கு திக்கு விஜயம் நடைபெறும். மே 8ம் தேதி (சித்திரை 25) வியாழக்கிழமை, காலை 8:35 மணியளவில் தொடங்கி 8:59 மணிக்குள் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறும். மே 9ம் தேதி (சித்திரை 26) வெள்ளிக்கிழமை, மீனாட்சி சுந்தரேசுவரர் திருத்தேருக்கு எழுந்தருள்வார்கள், பின்னர் காலை 6.30 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெறும். மே 10ம் தேதி சனிக்கிழமை, தீர்த்தம் மற்றும் தெய்வேந்திர பூஜையுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.

