ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட ஐந்து நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்க அனுமதிக்கும் சட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். ரஷ்யா மற்றும் ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட புதிய சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை அதிகளவில் வாங்கும் ஐந்து நாடுகளுக்கு 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்க டிரம்புக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெயை வாங்கும் நாடுகளில் இந்தியாவும், சீனாவும் இடம்பெற்றுள்ள நிலையில், அடுத்த 30 நாட்களில் இந்தியா உள்பட 5 நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 100 சதவீத வரி விதிக்கும் நடைமுறை அமலுக்கு வர உள்ளது. இந்த வரி விதிப்பு அமலுக்கு வந்தால் அமெரிக்காவில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிசக்தி விலை உயரும் அபாயம் உள்ளது. எனவே, நவம்பர் மாத இடைத்தேர்தலுக்கு முன்னதாக இந்த வரி விதிப்பை அமல்படுத்த டிரம்ப் தயக்கம் காட்டக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான எச்-1பி விசாக்களுக்கு 96 லட்சம் ரூபாய் கட்டணம் விதிக்கும் உத்தரவை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதேபோன்று அமெரிக்க தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்த நிறுவனங்களின் எச்-1பி விசா விண்ணப்பங்களை அமெரிக்க குடியேற்ற சேவைகள் முகமை தீவிரமாக ஆய்வு செய்ய உத்தரவிடும் புதிய ஆணையில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

