அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றியடைந்த டொனால்ட் டிரம்ப் இன்று தனது பதவியை ஏற்க உள்ளார். அமெரிக்காவின் 47வது அதிபராக அவர் பதவியேற்கும் விழா வாஷிங்டன் டிசியில் உள்ள கேபிடல் கட்டிடத்தில் நடைபெறும். இந்த நிகழ்வில் உலகின் தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் வணிகத் தலைவர்கள் என பல்வேறு துறைகளில் இருந்து முக்கியமானவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு இந்த நிகழ்வு தொடங்கும், இதில் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்சும் தனது பதவியை ஏற்க உள்ளார். முக்கிய உலக வல்லரசுகள் மற்றும் இந்தியா உட்பட அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகளுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. இந்திய அரசுக்கு முறையாக அழைப்பு அனுப்பப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட அழைப்பு வழங்கவில்லை. வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் போது, அமெரிக்க நிர்வாகத்தின் புதிய பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் சந்திப்புகளை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் இன்று தனது பதவியை ஏற்கவுள்ள நிலையில், தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் நாளிலேயே 200 முக்கியமான உத்திகளை வெளியிடுவார் எனவும், அமெரிக்காவின் தெற்கு எல்லை பகுதிகளில் அவசர நிலையை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

