விருதாச்சலம் சந்திப்பிலிருந்து ஜெயங்கொண்டான் வழியாக கும்பகோணம் நீடாமங்கலம் வரை ரயில் சேவையை நீட்டித்து தர அப்பகுதி மக்கள் நீண்டநாளாக கோரிக்கை வைத்துள்ளனர். 2015ஆம் ஆண்டு அன்றைய ரயில்வேதுறை அமைச்சர் சதானந்த கவுடா இத்திட்டம் 2016க்குள் கும்பகோணம் மகாமகம் நிகழ்விற்கு முன் நிறைவேற்றப்படும் என உறுதியளித்திருந்தார். எனினும் இத்திட்டம் தொடர்பாக எந்த வேலைகளும் தொடங்கப்படவில்லை. மீண்டும் இது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். ஆயினும் எதுவும் நடக்கததால் அப்பகுதி மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
தற்பொழுது என் மண், என் மக்கள் என்ற பாதயாத்திரையை மேற்கொண்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் இக்கோரிக்கை மீண்டும் வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேறினால், சென்னை, திருப்பதி, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களுக்கு பயண தூரம் குறையும் என்பது கூடுதல் தகவல். இந்த புதிய ரயில் வழித்தடம் செயல்படும் பட்சத்தில் நீடாமங்கலம் கைவிணைப் பொருட்கள் பிற ஊர்களுக்கு பெரிய அளவில் எடுத்துச் செல்ல ஓர் வாய்ப்பாக அமையும். குறிப்பாக அரியலூரில் அமைந்துள்ள யுனஸ்கோ பாரம்பரியச் சின்னம் கங்கைக் கொண்ட சோழபுரம் சுற்றுலா பயணிகளை பெருமளவு கவரும். இப்படி அப்பகுதி மக்களின் பொருளாதாரம் பலமடங்கு உயர வாய்ப்புள்ளதால் இந்த புதிய ரயில் வழித்தடத்தை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர அப்பகுதி மக்கள் பல வருடங்களாக முயற்சி எடுத்து வருகின்றனர்.

