2023 ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை போட்டிகள் நாளை தொடங்கவுள்ள நிலையில் சுற்றுப்பயண கோப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
7வது ‘ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை – 2023 சென்னை’ போட்டி ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது. ஹாக்கி இந்தியா அமைப்புடன் இணைந்து தமிழ்நாடு அரசு நடத்தவுள்ள இந்தப் போட்டியில், இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், மற்றும் கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன. 16 ஆண்டுகளுக்குப் பிறகு இப்புகழ்பெற்ற ஹாக்கிப் போட்டி சென்னையில் மீண்டும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை எழும்பூர், மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்தில் சர்வதேச அளவிலான இப்போட்டியினை சிறப்பாக நடத்துகின்ற வகையில், 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டரங்கம், ஒலிம்பிக் தரத்திலான புதிய செயற்கை இழை மைதானம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு பார்வையாளர் மாடம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 28-ம் தேதி திறந்து வைத்தார்.

