தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் அருகில் கடையம் கிராமத்தில் இருந்து 54 பேர் சுற்றுலா பேருந்து ஒன்றில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். அங்கு சுற்றிப்பார்த்துவிட்டு, ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது, குன்னூர் அருகே, 50 அடி பள்ளத்தில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற மீட்புப்படையினர் மற்றும் போலீசார், பேருந்து கவிழ்ந்த இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே குன்னூர் பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
விபத்து குறித்த விவரங்களை அறிய 1077, 0423-2450034 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
குன்னூர் பேருந்து விபத்து சம்பவத்திற்கு பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், குன்னூர் பேருந்து விபத்து சம்பவத்திற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

