பழனி மலைக் கோயிலுக்குள் செல்போன் , கேமரா கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வர உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பழனி மலைக்கோயிலுக்குள் செல்லும் பக்தர்கள் செல்போன், கேமரா ஆகியவற்றை கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை நாளை முதல் அமலுக்கு வருகிறது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கருவறையில் உள்ள நவபாஷாணத்தால் ஆன மூலவர் சிலை, தங்கக் கோபுரம், தங்கத் தேர், தங்க மயில் ஆகியவற்றை திருவிழாக் காலங்களில் சிலர் கைப்பேசியில் படமெடுத்து சமூக வலைதளங்களில் பரப்புவது வழக்கம்.
இந்த நிலையில் மலைக் கோயிலில் புகைப்படம் பிடிக்கக் கூடாது என பல இடங்களில் அறிவிப்பு பலகை இடம்பெற்றும் பக்தர்கள் அதனை கண்டுகொள்வதில்லை. அண்மையில் பலரும் மூலவரைப் படமெடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் முருக பக்தர் ஒருவர் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கில் நீதிமன்றம் இந்து சமய அறநிலையத் துறைக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கியது.
செல்போன் , கேமராவை கொண்டு வரும் பக்தர்கள் படிவழிப் பாதை, வின்ச் நிலையம், ரோப்கார் நிலையங்களில் இதற்கென அமைக்கப்பட்ட பாதுகாப்பு மையங்களில் ஒரு கைப்பேசிக்கு ரூ. 5 கட்டணம் செலுத்தி, ஒப்படைத்துவிட்டு செல்லவும், தரிசனம் முடிந்த பின்னர் அவற்றைப் பெற்றுக் கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த தடை உத்தரவு பழனி மலை முருகன் கோயிலில் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
இதையடுத்து, வருகிற அக்டோபர் 1- ஆம் தேதி முதல் பழனி மலைக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கைப்பேசி, புகைப்பட கருவிகளைக் கொண்டு வர திருக்கோயில் நிர்வாகம் தடைவிதித்து அறிவிப்பு வெளியிட்டது.
