சிலர் என்னை எல்லா நேரத்திலும் சிறந்தவர் (Greatest of All Time GOAT) என்று அழைக்கிறார்கள். ஆனால் இப்போது நான் பலி ஆடு (Goat)’ ஆகிறேன் என்று ஏ.ஆர்.ரகுமான் வேதனை தெரிவித்துள்ளார்.
மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி சென்னை அருகே பனையூர் ஆதித்யாராம் பேலஸ் சிட்டியில் நேற்றிரவு நடந்தது. இதனை கண்டு ரசிப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் டிக்கெட் பெற்று நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் பயணித்து சென்னைக்கு வந்தனர். நிகழ்ச்சி நடக்கும் இடம் அருகே ஓ.எம்.ஆர். சாலையில், பார்வையாளர்களின் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பார்வையாளர்கள் நிரம்பி விட்டதாகவும், இதனால் டிக்கெட் பெற்றிருந்தும் ஏராளமானோர் வெளியேற்றப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பாதிக்கப்பட்டவர்கள் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் நேற்று மாலையில் இருந்து ரகுமானின் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். பார்வையாளர்கள் அமர்வதற்கான இருக்கை முதல் பார்க்கிங் வரையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குளறுபடி செய்து விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதனை ஏ.சி.டி.சி. என்ற நிறுவனம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செய்திருந்த நிலையில், பாதிக்கப்பட்டோர் ஏ.ஆர்.ரகுமான் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற ரீதியில் கருத்துக்களை பதிவிட்டிருந்தனர். இதற்கு பதில் அளித்த ரகுமான் arr4chennai@btos.in என்ற மின் அஞ்சலில் குறைகளை தெரிவிக்குமாறும் அதற்கு அவரது அணியினர் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் எக்ஸ் தளத்தில் கூறியிருந்தார்.
இதனையும் சிலர் விமர்சித்திருந்த நிலையில் அதுகுறித்து இன்ஸ்டாகிராமில் ஏ.ஆர்.ரகுமான் வேதனை தெரிவித்துள்ளார். அவர் தனது இன்ஸ்டா பதிவில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான ஏசிடிசி நிறுவனம், 46 ஆயிரம் இருக்கைகள் போட்டிருந்த நிலையில், சில பகுதிகளில் மட்டும் அதிகளவிலான ரசிகர்கள் கூடி விட்டதாகவும் இதனை பார்த்த காவலர்கள் அரங்கம் நிரம்பிவிட்டதாக நினைத்து நுழைவு வாயிலை மூடிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
உலகளாவிய அனுபவத்திற்காக உலகத்தரம் வாய்ந்த ஏற்பாடுகள் தேவை என்பதை இதன் மூலம் தான் கற்றுக்கொண்டதாகவும், இசையமைப்பாளர் என்பதையும் தாண்டி உட்கட்டமைப்பிலும் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட ரசிகர்கள் தொடர்பான விவரங்களை சேகரித்து வருவதாகவும், அவர்களுக்கு விரைவில் ஆச்சரியம் அளிப்போம் என்றும் ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார்.
நேரத்திலும் சிறந்தவர் (Greatest of All Time GOAT) என்று அழைக்கிறார்கள். ஆனால் இப்போது நான் பலி ஆடு (Goat)’ ஆகிறேன். சென்னையில் உலகத்தர கட்டமைப்பு, சுற்றுலா உள்ளிட்டவை சிறந்து விளங்க வாய்ப்புகளை வழங்க வேண்டும். என்று கூறியுள்ளார்.
