அட்டாரி வாகா எல்லையில் கொடி இறக்க நிகழ்வை காண பொதுமக்களுக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி வழங்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் 22ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என இந்தியா குற்றம்சாட்டியது, அதற்கான பதிலாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் தகுந்த நடவடிக்கை எடுத்தது. இதற்குப் பின்னர், இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் மேற்கொண்ட அத்துமீறிய தாக்குதலை இந்திய ஆயுத படைகள் வெற்றிகரமாக முறியடித்தன. இதற்கிடையில், இந்தியா பாகிஸ்தான் இடையேயான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது மற்றும் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வௌியேற வேண்டும் என உத்தரவிட்டது.பாகிஸ்தானும் இந்தியாவும் பல்வேறு தடைகளை விதித்துள்ளன. இரு நாடுகளும் தங்கள் வான்வெளியை பயன்படுத்த பரஸ்பர தடைகள் விதித்ததால் விமான போக்குவரத்து முடங்கியது. இதன் தொடர்ச்சியாக, இந்தியா பாகிஸ்தான் எல்லையின் அட்டாரி வாகா பகுதியில் உள்ள எல்லை கதவுகள் மூடப்பட்டு, அங்கு நடைபெறும் கொடி இறக்க நிகழ்வு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. தற்போது இந்தியா – பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்த நிலையில், 12 நாள்களுக்கு பிறகு அட்டாரி வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்வு நேற்று மாலை முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நேற்று ஊடகத்தினருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், இன்று முதல் கொடி இறக்க நிகழ்வை பொதுமக்கள் காணலாம்.

