ஜி 20 மாநாட்டின் இரவு விருந்து நிகழ்ச்சியில் உறுப்பு நாடுகளின் தலைவர்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரவேற்றார். ஜி-20 குழுவின் 18-வது மாநாடு இன்றும் நாளையும் டெல்லியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாடு நடைபெறும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜி20 மாநாட்டின் முதல் நாளான இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அளிக்கும் இரவு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய விருந்தினர்கள் வருகைதரத் தொடங்கினர்.
டெல்லி பாரத் மண்டபத்தின் பிரமாண்டமான அறையில் நடைபெறும் இந்த சிறப்பு இரவு விருந்தில் முன்னாள் பிரதமர், குடியரசுத் தலைவர் உள்பட 170 முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர். நமது நாட்டின் பாரம்பரியத்தை பறை சாற்றும் வகையிலான சைவ, அசைவ உணவுகள் விருந்தில் இடம்பெற்றுள்ளன.
விருந்தின்போது 50 க்கும் மேற்பட்ட இசைகலைஞர்கள் பங்கேற்கும் இசைக்கச்சேரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அளிக்கும் இரவு விருந்துக்கு ஜி-20 அமைப்பு நாடுகளின் தலைவர்கள் உள்பட ஏராளமான தலைவர்கள் வருகைத்தரத் தொடங்கினர். அவர்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரவேற்றார்.

