2027ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான தயாரிப்புகள் நாட்டில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த கணக்கெடுப்பை முதன்முறையாக டிஜிட்டல் முறையில் நடத்தவும், சாதி விவரங்களையும் சேர்க்கவும் ஒன்றிய அரசு முன்பே ஒப்புதல் அளித்துள்ளது. சுமார் 30 லட்சம் பணியாளர்கள் ஈடுபடவுள்ள இந்தப் பணிக்காக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 2026 ஜனவரி 15க்குள் கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களை நியமித்து முடிக்க வேண்டும் என்று இந்தியப் பதிவாளர் ஜெனரல் உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர்கள், எழுத்தர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோரை பயன்படுத்தலாம் என்றும், 6 கணக்கெடுப்பாளர்களுக்கு ஒருவர் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.கணக்கெடுப்பு மேலாண்மை மற்றும் கண்காணிப்பு இணையதளம் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளதால், அனைத்து அலுவலர்களின் விவரங்களும் அதில் பதிவுசெய்ய வேண்டும். மேலும் அவசர தேவைக்காக 10% கூடுதல் பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக வீடு கணக்கெடுப்பு 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடைபெறும். முக்கியமான மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பிப்ரவரியில் நடைபெறவுள்ளது.

