ஹார்முஸ் நீரிணை விவகாரம் உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளார்.ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போர் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன. இதற்கு பதிலடியாக, ஈரானும் தீவிரமான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதி நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.மேலும், ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால், உலகளவில் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக எண்ணெய் விலை உயர்ந்து, பல நாடுகள் பொருளாதார அழுத்தத்தை சந்தித்து வருகின்றன. ஹார்முஸ் வழியாக செல்லும் கப்பல்களுக்கும் பாதுகாப்பு சிக்கல் ஏற்பட்டுள்ளது.இந்த சூழ்நிலையில், அந்த வழியாக செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்க அமெரிக்கா தனது நட்பு நாடுகளிடம் உதவி கேட்டது. ஆனால் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள், தங்களது போர்க் கப்பல்களை அனுப்ப திட்டமில்லை என்று தெரிவித்துள்ளன.இதற்கு எதிர்வினையாக, நட்பு நாடுகள் உதவாவிட்டால் NATO அமைப்பின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று ட்ரம்ப் எச்சரித்தார். மேலும் உதவ முன்வராத நாடுகளை நினைவில் வைத்துக்கொள்வேன் என்றும் அவர் கூறினார்.இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இந்த விவகாரத்தில் உதவுவார் என நம்புகிறேன் என்றும், உண்மையில் அமெரிக்காவுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை என்றும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

