ஐபிஎல் 2025 மெகா ஏலம்: 27 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்ட ரிஷப் பந்த்

இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பந்த் ரூ. 27 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டுள்ளார். ஏலத்தின்போது அவரை எடுப்பதற்கு 3 அணிகள் கடுமையாக போட்டி போட்டன.
2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 10 ஐபிஎல் அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த ஏலத்தில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 18 கோடி கொடுத்து ஆர்.டி.எம் முறையில் தக்க வைத்துக் கொண்டது.
இதைத் தொடர்ந்து தற்போதைய சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் பெயர் ஏலத்தில் அறிவிக்கப்பட்டது. அவரை வாங்குவதற்கு ஒவ்வொரு அணிகளும் அதிக ஆர்வம் காட்டின.
இறுதியாக பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் ஏலத்தில் கடுமையாக போட்டியிட்டது. ஒவ்வொரு அணிகளும் 25 லட்ச ரூபாயை உயர்த்திக் கொண்டே சென்றதால் அதிக பரபரப்பு காணப்பட்டது. இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 26.75 கோடி ரூபாய்க்கு ஷ்ரேயாஸ் ஐயரை அணியில் எடுத்துக் கொண்டது.
டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ரிஷப் பந்த்தை அணியில் எடுப்பதற்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் டெல்லி அணிகள் போட்டியிட்டன.
ஏலத்தின்போது ரிஷப் பந்த் மீதான விலையை லக்னோ மற்றும் ஐதராபாத் அணியின் உரிமையாளர்கள் 25 லட்ச ரூபாயாக உயர்த்திக் கொண்டே சென்றனர். லக்னோ அணி ரூ. 20.75 கோடி நிர்ணயித்தபோது, அதற்கு மேல் சன்ரைசர்ஸ் அணி ஆர்வம் காட்டவில்லை.
அப்போது ஆர்டிஎம் முறையை பயன்படுத்தி தக்க வைத்துக் கொள்ள விருப்பமா என டெல்லி அணியிடம் கேட்கப்பட்டது. அதற்கு டெல்லி சம்மதித்தபோது, ரூ. 27 கோடியை ரிஷப் பந்திற்கு லக்னோ அணி அறிவித்தது. அதனை செலுத்த டெல்லி அணி நிர்வாகம் ஆர்வம் காட்டாததால், ரூ. 27 கோடிக்கு ரிஷப் பந்த் லக்னோ அணிக்கு வழங்கப்பட்டுள்ளார்.
இதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர்தான் பஞ்சாப் அணியால் ஷ்ரேயாஸ் ஐயர் ரூ. 26.75 கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்டார். அவர்தான் மிக அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரராக இருந்த நிலையில், அடுத்த சில நிமிடங்களில் அவரது சாதனையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் ரிஷப் பந்த்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *