ஐரோப்பாவில் குடியேற விரும்புவோருக்கு ஒரு நாட்டிலுள்ள மாகாணம் இந்திய மதிப்பில் ₹27,00,000 லட்ச ரூபாய் அளவுக்கு மானியம் வழங்குகிறது. இது குறித்த தகவல்கள் ஐரோப்பாவில் கவனம் பெற்று வருகிறது
ஐரோப்பிய நாடான இத்தாலியில் டஸ்கனி என்ற பிராந்தியம் உள்ளது. இங்கே மலைவாழ் மற்றும் கிராமப்புற சமூகங்களுக்குச் செல்லும் மக்களை ஊக்குவிக்கும் விதமாகத் திட்டம் ஒன்று கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தில் தகுதி பெறும் மக்களுக்கு அதிகபட்சமாக இந்திய மதிப்பில் ரூ. 27 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
டஸ்கனி பிராந்தியத்தில் மலைவாழ் மற்றும் கிராமப் பகுதிகளுக்குச் சென்று குடியேற விரும்புவோருக்கு இந்த மானியம் வழங்கப்படும். இதன்மூலம் அந்தப் பகுதியில் வீட்டைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. இதற்காக சுமார் 30 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் தகுதி பெறுவோர் தாங்கள் செல்லும் மலை அல்லது கிராமப் பகுதியில் உள்ள இடத்தைத் தங்களது நிரந்தர வசிப்பிடமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இத்தாலி குடிமக்கள் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த குடிமக்கள் அல்லது ஐரோப்பாவில் குறைந்தது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் உரிமையை வைத்திருக்கும் வெளிநாட்டினர் ஆகியோரில் யாரேனும் விண்ணப்பம் செய்யலாம்.
டஸ்கனி பிராந்தியத்தைப் போன்று மேலும் சில பகுதிகளிலும் இதேபோன்ற திட்டத்தை இத்தாலி அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் உள்ளூர் பொருளாதாரம் மேம்படுவதுடன் சிறிய அளவிலான சமூகங்களுக்குப் புதிய வாழ்க்கையும் உருவாகும் என்றும் இத்தாலி அரசு கூறியுள்ளது.

