இந்திய விமானப்படை தனது 92-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் நிகழ்வாக, சென்னை மெரினா கடற்கரையில் அக்டோபர் 6-ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை 2 மணி நேரம் நீடிக்கும் பிரமாண்ட விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதன் காரணமாக, போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. போக்குவரத்து காவல்துறை இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது, சாகச நிகழ்ச்சியை காண வருபவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருவான்மியூரிலிருந்து பாரிமுனை வரை காமராஜர் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாஸ் வைத்துள்ளவர்கள் காமராஜர் சாலையில் காந்தி சிலை முதல் போர் நினைவு சின்னம் வரை செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாஸ் இல்லாதவர்கள் வாலாஜா சாலையில் வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்களை பயன்படுத்துவதற்கான அறிவுறுத்தலை காவல்துறை வழங்கியுள்ளது. சர்தார் படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை மற்றும் அண்ணா சாலை வழியாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், பாரிமுனை-திருவான்மியூர் செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, தேனாம்பேட்டை மற்றும் காந்தி மண்டபம் வழியாக செல்லலாம் என்று கூறியுள்ளது. வாகன நிறுத்தும் இடங்களில் காலை 9.30 மணி வரை வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்படுகிறது. வாகன நெரிசலை குறைக்க, மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில் மற்றும் பறக்கும் ரயிலை பயன்படுத்துவதற்கான வேண்டுகோளை காவல்துறை முன்வைத்துள்ளது.

