அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 297 அரிய கலைப் பொருட்கள்; பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அரசியல் இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வட அமெரிக்கா

ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் சொந்த ஊரான வில்மிங்டன் நகரத்தில் இந்த குவாட் கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றுவருகிறது. இதில், பங்கேற்ற பிரதமர் மோடி, பல்வேறு நாட்டு தலைவர்களுடனும் கலந்துரையாடினார். மேலும், இந்த மாநாட்டில் பேசிய மோடி, “இந்தக் கூட்டமைப்பு எந்த ஒரு நாட்டுக்கும் எதிரானது அல்ல. பாதுகாப்பு, இறையாண்மை, அனைத்து பிரச்சனைகளுக்கும் அமைதியான முறையில் தீர்வு ஆகியவற்றுக்கான கூட்டமைப்பு இது.
உலகம் முழுக்க பதற்றம், மோதல்கள் நடந்துவரும் நிலையில், குவாட் கூட்டமைப்பு நடக்கிறது. அடுத்த ஆண்டுக்கான குவாட் உச்சி மாநாட்டை இந்தியா நடத்துவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்று பேசினார்.
இதேசமயம் வரும் நவம்பர் மாதம் 5-ம் தேதி அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பாக தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸை வேட்பாளராக களமிறக்கியுள்ளது. அதேபோல், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வேட்பாளராக களமிறங்குகிறார்.
இப்படியான சூழலில் சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் மோடியின் இந்த மூன்று நாள் பயணத்தில் ஒரு நாள் அவரை சந்தித்துப் பேசவுள்ளதாக அறிவித்தார். இது அங்குள்ள இந்திய வம்சாவளியினரின் வாக்குகளை கவரும் என சொல்லப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவில் பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடனை சந்தித்து அவருக்கும், அவரது மனைவிக்கும் பரிசு வழங்கியிருக்கிறார்.
அதிபர் ஜோ பைடனை டெலவரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்த பிரதமர் மோடி, அவருக்கு வெள்ளியாலான ரயில் மாதிரியை பரிசளித்தார். இதேபோன்று ஜோ பைடனின் மனைவிக்கு காஷ்மீரின் பஷ்மினா சால்வையையும் பரிசாக வழங்கினார்.
அப்போது, இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 297 பழங்கால கலைப் பொருள்களை அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தார். இந்த விலைமதிப்பற்ற கலைப் பொருள்களை திருப்பிக் கொடுத்ததற்காக அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *