இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘ஐஎன்எஸ் வாக்ஷீர்’ என்ற நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்து ஒரு முக்கியமான சாதனையை நிகழ்த்தினார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமிற்குப் பிறகு, நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்த இரண்டாவது ஜனாதிபதியாக அவர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.ஜனாதிபதி திரவுபதி முர்மு, கோவா, கர்நாடகா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, அவர் நேற்று முன்தினம் மாலை டெல்லியிலிருந்து கோவாவுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை கர்நாடகா மாநிலத்தில் உள்ள கார்வாருக்கு வந்தார்.கார்வாரில் உள்ள இந்திய கடற்படை தளத்திற்கு சென்ற ஜனாதிபதி, அங்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கல்வாரி வகையைச் சேர்ந்த ‘ஐஎன்எஸ் வாக்ஷீர்’ நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்தார். கடற்படை சீருடை அணிந்திருந்த அவர், கப்பலில் ஏறும் போது அங்கு இருந்தவர்களை பார்த்து கையசைத்தார்.இந்த பயணத்தின் போது இந்திய கடற்படை தலைமை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதியும் உடன் இருந்தார். இதற்கு முன்பு, 2006 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் முதன்முறையாக நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்திருந்தார். அதன்பின் சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது ஜனாதிபதி திரவுபதி முர்மு இந்த வரலாற்றுச் சிறப்பான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

