கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் முக்கியமான உரையாடலை மேற்கொண்டார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியதாவது: கிரீஸ் பிரதமருடன் வெள்ளிக்கிழமை நான் ஆக்கப்பூர்வமான உரையாடலை நடத்தினேன். இந்தியா மற்றும் கிரீஸ் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழி இருவரிடமும் இருந்தது. வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்தியாவின் மதிப்புமிக்க நண்பராக கிரீஸ் திகழ்கிறது. அதன் அடிப்படையில், மத்திய அரசு ‘இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம்’ திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.இந்த திட்டத்தின் அடிப்படையில், இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, இஸ்ரேல் மற்றும் கிரீஸ் நாடுகளில் கடல், ரயில் மற்றும் சாலை வழியாக 6,000 கிலோமீட்டர் தொலைவுக்கு இணைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. இதில் 3,500 கிலோமீட்டர் கடல் வழித்தடமாக இருக்கும். தற்போது இந்தியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சரக்குகளை கொண்டு செல்ல 36 நாட்கள் ஆகிறது, ஆனால் புதிய வழித்தடத்தின் மூலம் இந்திய சரக்குகளை ஐரோப்பாவுக்கு 14 நாட்களுக்குள் கொண்டு செல்ல முடியும். இந்த திட்டத்தில், ஐரோப்பிய நாடுகளுக்கு இந்திய சரக்குகள் கிரீஸ் நாட்டின் நுழைவு வாயிலாக சென்றடையவுள்ளது. கடந்த பிப்ரவரியில் கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் இந்தியாவுக்கு வருகை தந்த போது, இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தற்போதைய தொலைபேசி உரையாடலிலும் இந்த திட்டம் குறித்து இந்திய மற்றும் கிரீஸ் பிரதமர்கள் பேசினர்.

