இன்று (மார்ச் 19) நாடு முழுவதும் நடைபெறவிருந்த RRB ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது, இதனால் தேர்வு மையங்களுக்கு சென்ற தேர்வர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ரயில்வேயில் 18,799 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு முதல்நிலை கணினித் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்று மற்றும் நாளை (மார்ச் 19, 20) இரண்டாம் நிலை கணினித் தேர்வு (CBT 2) நடைபெறவிருந்தது. இதற்காக, தேர்வர்கள் இன்று காலை தேர்வு மையங்களுக்கு சென்றிருந்தனர். இன்று நடைபெறவிருந்த இரண்டு ஷிப்ட் தேர்வுகள் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக தேர்வுக்கு சற்று நேரம் முன்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.மேலும், இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் வேறு ஒரு நாளில் நடத்தப்படும் என்றும், அதற்கான அறிவிப்பு ரயில்வே தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு ஒட்டிவைப்பை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
