புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூரில், சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மூவர் கோவில் மற்றும் முசுகுந்தீஸ்வரர் கோவில் போன்ற பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோவில்கள் உள்ளன. இந்நிலையில், அங்கு உள்ள மற்ற வரலாற்று சின்னங்களை ஆராய்வதற்காக, கொடும்பாளூரில் அமைந்துள்ள அக்ரஹாரம் மேட்டு பகுதிகளில் மத்திய தொல்லியல் துறையின் திருச்சி வட்ட பிரிவு சார்பில் தற்போது அகழாய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அகழாய்வின் போது தங்கத்தால் உருவாக்கப்பட்ட சிறிய அளவிலான குண்டுமணி மற்றும் மூடிய நிலையில் உள்ள மண் பானை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குண்டுமணியின் எடை ஒரு கிராம் ஆகும். மண் பானைகள் தொடர்பான முழு தகவல்கள் ஆய்வுக்குப் பிறகு வெளிப்படும் என அகழாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இங்கு, சுமார் 4 அடி ஆழத்தில் செங்கல் சுவர் கட்டுமானம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தக்களி மற்றும் கொண்டை வடிவில் உள்ள ஊசிகள், வட்டக்கல் மற்றும் கூர் வடிவிலான எலும்புகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
