உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா–உக்ரைன் போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நேற்று உக்ரைனின் நிப்ரோ நகரில் ரஷ்ய ராணுவம் திடீரென டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் சுரங்க தொழிலாளர்களை பணியிடத்திலிருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்ற பேருந்து மீது குண்டு பாய்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 15 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 7 பேர் பலத்த காயமடைந்தனர்.இந்த பேருந்து தங்களுக்குச் சொந்தமானது என்று உக்ரைனின் பெரிய தனியார் எரிசக்தி நிறுவனமான டி.டி.ஈ.கே (DTEK) உறுதிப்படுத்தியுள்ளது. சுரங்கத் தொழிலாளர்கள் பணி முடித்து திரும்பும் நேரத்தில் இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இதனிடையே, போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே அடுத்த வாரம் மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

