இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க ஏஐ தொழில்நுட்பத் துறையின் கொள்கை ஆலோசகராக நியமித்துள்ளார். வெள்ளை மாளிகையின் அறிவியல் தொழிநுட்ப கொள்கை துறையின் ஏஐ பிரிவில் மூத்த ஆலோசகராக ஸ்ரீராம் கிருஷ்ணன் பணியாற்றுவார் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். மைக்ரோசாஃப்ட், ட்விட்டர், யாஹு, பேஸ்புக், மற்றும் ஸ்நாப் போன்ற நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட கிருஷ்ணன், டேவிட் ஓ சாக்ஸுடன் இணைந்து பணியாற்றுவார். டேவிட் சேக்ஸ் வெள்ளை மாளிகை ஏஐ மற்றும் கிரிப்டோ துறை தலைவராக செயல்படுவார். ஸ்ரீராம் கிருஷ்ணன் புதிய பதவியைப் பற்றிய கருத்தில், “ஏஐ துறையில் அமெரிக்காவை தொடர்ந்து முன்னணி நிலையைப் பிடிக்க உறுதி செய்யும் வகையில், நாட்டிற்கு சேவையாற்றுவதில் பெருமை அடைகிறேன்” எனக் கூறியுள்ளார். அவர் சென்னையில் பிறந்து, வளர்ந்து, கல்வி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. முந்தைய காலத்தில், அமெரிக்காவின் ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்பிஐ – FBI) இயக்குநராக, ட்ரம்ப் தனது நெருங்கிய நம்பிக்கையாளர் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் பட்டேலை நியமித்தார். மேலும், உளவுத்துறை இயக்குநராக துளசி கப்பார்டை தேர்வு செய்தார். தற்போது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனை அமெரிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் துறையின் கொள்கை ஆலோசகராக நியமித்துள்ளார்.

