சென்னையின் அருகிலுள்ள கவரைப்பேட்டை ஆர்எம்கே பள்ளியில் 30-வது தேசிய சப் ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. 27 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் இதில் பங்கேற்றன. ஆடவர் பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், தமிழக அணி கேரளாவை எதிர்கொண்டு 29-18 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதில், முகமது வஹித் 18 கோல்கள் அடித்து அதிகபட்சமாக விளையாடினார்.மூன்றாவது இடத்துக்கான போட்டியில், தெலங்கானா 24-22 என்ற கணக்கில் ஹரியானாவை வென்றது. சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணிக்கு ஆர்எம்கே கல்விக்குழுமங்களின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் பரிசு கோப்பையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இந்திய நெட்பால் சம்மேளத்தின் தலைவர் சுமன் கவுசிக், பொதுச்செயலாளர் விஜேந்தர் சிங், ஆர்எம்கே கல்விக்குழுமங்களின் துணைத்தலைவர்கள் ஆர்.எம்.கிஷோர் மற்றும் துர்காதேவி பிரதீப், செயலாளர் யலமஞ்சி பிரதீப், தமிழ்நாடு நெட்பால் சங்கத்தின் தலைவர் பி.செல்வராசு, ஆர்எம்கே உண்டு உறைவிட பள்ளியின் முதல்வர் ஷப்னா சங்க்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

