ஆருத்ரா விழா: சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் தொடங்கியது
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து வருகின்றனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா உற்சவம் கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் இறைவன் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.
இந்நிலையில் ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது. நடராஜர் ,சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளும், தனித்தனி தேர்களில் வலம் வருகின்றனர்.
இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்தில் குவிந்துள்ளனர். நாளை சூரிய உதயத்திற்கு முன் காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெற உள்ளது . இதைத் தொடர்ந்து சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதி உலாவும் நடைபெறும்.
அத்துடன் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனம், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெற உள்ளது. ஜனவரி 7ஆம் தேதி பஞ்சமூர்த்தி முத்து பல்லக்கு வீதி உலா உடன் விழா முடிவடைகிறது.