திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடு. கடல் அருகே அமைந்துள்ள இக்கோயிலில் தரிசனத்திற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர்.
இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா இந்த ஆண்டு ஜூலை 7ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி இன்று யாகசாலை பூஜை தொடங்குகிறது. இந்த யாகசாலை பூஜைக்காக ராஜகோபுரம் அருகே 8000 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 76 குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு ஆயிரம் கும்பங்கள் வைத்து யாகசாலையில் பூஜை செய்யப்படுகிறது. இதையொட்டி யாகசாலையில் வைக்கப்படக்கூடிய கும்பங்களுக்கு கலர் நூல் சுற்றி, புனித நீர் நிரப்பி, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் யாகத்திற்குப் பயன்படுத்தக்கூடிய வசம்பு, திப்பிலி, வெள்ளை மிளகு, ரோஜா மொக்கு, கருங்காலிநரிப்பயிறு, கடல்பாசி, மரிக்கொழுந்து, கருப்பு எள், கருஞ்சீரகம், நவதானியங்கள், மூலிகைகள் உள்ளிட்ட 108 வகை பொருட்கள், மேலும் ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பல வகை கனிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் பூஜைக்கு பயன்படுத்தக்கூடிய தீபாராதனை தட்டு உள்ளிட்ட பூஜை பொருள்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த யாகசாலை பூஜையில் 100 சிவாச்சாரியார்கள் பூஜையில் ஈடுபடுகின்றனர். இன்று மாலை தொடங்கும் யாகசாலை பூஜை 7 நாட்களும், தினமும் காலை, மாலையிலும் நடைபெறுகிறது.

