நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தென் மாவட்டங்களில் தேவார பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. இதில் பங்குனி மாதத்தில் நடக்கும் உத்திர திருவிழா ஆண்டு தோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டுக்கான பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சுவாமி சன்னதியில் கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கொடிப்பட்டம் வீதியுலா வந்தது.

