பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசி மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வு 50% இறக்குமதி வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்களால் பாதிக்கப்பட்ட இந்தியாவுடனான உறவை மீட்டெடுப்பதில் அமெரிக்கா எடுத்துள்ள முக்கிய முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது. இது தொடர்பாக ட்ரம்ப் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “எனது நண்பர் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஓர் அற்புதமான தொலைபேசி அழைப்பில் பேசினேன். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஒரு மகத்தான வேலையைச் செய்கிறார். ரஷ்யா – உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் உங்கள் ஆதரவுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார் .ட்ரம்ப் வாழ்த்தியதைப் பற்றி பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “எனது நண்பர் அதிபர் ட்ரம்ப்பின் தொலைபேசி அழைப்புக்கும், எனது 75வது பிறந்த நாளில் தெரிவித்த அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி. உங்களைப் போலவே, இந்தியா -அமெரிக்கா மற்றும் உலகளாவிய நல்லுறவை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்வதில் நானும் உறுதியாக உள்ளேன். உக்ரைன் மோதலில் அமைதியான தீர்வுக்கான உங்கள் முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார். .

