பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான OPECல் இருந்து விலகுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்த நிலையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
தங்கள் மீது ஈரான் தொடர் தாக்குதலை நடத்திய போது, ஒபெக் அமைப்பு தங்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை என ஐக்கிய அரபு அமீரகம் சமீபத்தில் விரக்தியை வெளிப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக மே 1ஆம் தேதி முதல் இந்த ஒபெக் கூட்டமைப்பிலிருந்தே விலகவுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்தது.
ஒபெக் கூட்டமைப்பில் உறுப்பினராக இருக்கும் நாடுகள், இந்த அமைப்பு கூறும் அளவிலேயே தினமும் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்ய வேண்டும். தற்போது அதிலிருந்து விலகியுள்ளதால் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஐக்கிய அரபு அமீரகமே இனி சுயமாக செயல்படும் என கருதப்படுகிறது.
இந்த முடிவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஈரானின் துறைமுகங்களை அமெரிக்கா முடக்கி உள்ள நிலையில், இந்த நிலை மேலும் பல மாதங்களுக்கு நீடிக்கும் என டிரம்ப் தெரிவித்தார். இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 6 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 125 டாலரை தாண்டியது.
மற்றொருபக்கம், ஏற்கெனவே நிலவிவரும் போர் பதற்றத்தாலும் ஹார்முஸ் நீரிணை முடக்கத்தாலும் உலகம் முழுவதும் எரிவாயு விலை உச்சத்தை தொட்டு வருகிறது. இதுபற்றி பேசியுள்ள டிரம்ப், “ஈரான் உடனான போர் மற்றும் பதற்றங்கள் முடிவுக்கு வந்தவுடன், அமெரிக்காவின் எரிவாயு மற்றும் பெட்ரோல் விலைகள் வேகமாக வீழ்ச்சியடையும்” என்றுள்ளார்.

