அமெரிக்க தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் விவேக் ராமசாமி; அயோவா மாகாண தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவால் இம்முடிவு

அரசியல் உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றவை முதன்மை செய்தி வட அமெரிக்கா வரும் நிகழ்ச்சிகள்

இந்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்ய நடந்த அயோவா மாகாண தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி அறிவித்தார். அமெரிக்காவில் பிரதான அரசியல் கட்சிகள் என்றால் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிகள்தான். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் தற்போது அமெரிக்க அதிபராக உள்ளார். இந்த ஆண்டு (2024) அவரின் பதவிக்காலம் முடியவுள்ளதால் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும்.
அதற்கு மாகாணங்கள் தோறும் வாக்குப்பதிவு நடைபெறும். இருக்கட்சிகள் சார்பிலும் நடக்கும் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்ட தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள். அதன்படி குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது. முன்னாள் அதிபர் ட்ரம்ப், இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவரும், தெற்கு கரோலினா மாகாண முன்னாள் ஆளுநருமான நிக்கி ஹேலி, தொழிலதிபா் விவேக் ராமசாமி உள்ளிட்டோர் களத்தில் இருந்தனர். இதில் அயோவா தேர்தல் மூலமாக தனது வெற்றிக் கணக்கை ட்ரம்ப் துவக்கியுள்ளார்.
விவேக் ராமசாமி 7.7 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்ததால், அவர் அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் இன்றிரவு இந்த உண்மையை ஏற்றுக் கொள்கிறேன். இது கடுமையாகவே இருக்கிறது. ஆனாலும் ஏற்கிறேன். இன்று மக்களை ஆச்சர்யப்படுத்தும் முடிவை எதிர்பார்த்தோம். அது கிட்டவில்லை’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *