அமெரிக்காவின் வர்த்தகப் போர் மற்றும் பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடியாக, சீனா தலைமையில் கூடும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில், புதிய உலக அதிகார மையத்தை உருவாக்கும் முயற்சியாக ‘குளோபல் சவுத்’ எனப்படும் தெற்கு உலக நாடுகளின் சந்திப்பாக பார்க்கப்படுகிறது. கடந்த 2020ம் ஆண்டு இந்திய – சீன எல்லையில் ராணவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான பதற்றம் நிலவி வந்தது. இருதரப்பு உறவுகள் முறிந்த நிலையில், ராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியில் முடிந்தன. இதேபோல், உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யாவை உலக அரங்கில் தனிமைப்படுத்த அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் முயன்று வந்தன. கடந்த ஆண்டு ரஷ்யாவின் கசான் நகரில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில், மேற்கத்திய தலைவர்கள் ரஷ்ய அதிபர் புதினைப் புறக்கணித்தபோதும், பிரதமர் மோடி அவருடன் ஒரே மேடையைப் பகிர்ந்துகொண்டார்.
இந்தச் சூழலில், இந்தியா, சீனா, ரஷ்யா இடையே முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா விரும்புவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அரசியல் பின்னணியில், சீன அதிபர் ஜி ஜின்பிங், அடுத்த வாரம் 20க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்களை சீனாவின் தியான்ஜின் நகரில் ஒன்றுதிரட்டுகிறார். வரும் 31ம் தேதி முதல் செப்டம்பர் 1 வரை நடைபெறும் இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் யுகத்தில் ‘குளோபல் சவுத்’ எனப்படும் தெற்கு உலக நாடுகளின் ஒற்றுமையைக் காட்டும் சக்திவாய்ந்த முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. ரஷ்ய அதிபர் புதின், மத்திய ஆசியா, மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர். குறிப்பாக, 7 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு பிரதமர் மோடி சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வது, இருதரப்பு உறவில் பதற்றம் தணிந்து வருவதற்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது.

