விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில், தமிழகம் முழுவதும் இரவு நேர பாடசாலை தொடங்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூலை 15ம் தேதி துவங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வந்த ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த நிலையில், நேற்று திடீர் என விஜய் மக்கள் இயக்க மாவட்ட பொறுப்பாளர்களை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பின் போது, விஜய் முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்தில் மட்டுமே மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்ததாக கூறப்படுகிறது.
விஜய்யின், சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சில நிர்வாகிகள் விஜய் பேசியது குறித்து மீடியாக்களிடம் பகிர்ந்து கொண்டனர். இந்த சந்திப்பில் விஜய் அரசியலில் இறங்குவது என்றால், திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறியதாகவும், தொடர்ந்து அரசியலில் மட்டுமே ஈடுபடுவேன் என தெரிவித்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும் நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கான அனைத்து கட்டமைப்புகளும் தயாராக உள்ள நிலையில். அவர் கைகாட்டியதும் அரசியலில் ஈடுபடுவோம், என மாவட்ட பொறுப்பாளர்கள் உற்சாகமாக தெரிவித்தனர்.

