16 ஆம் நூற்றாண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வரும் உலக வரைபடத்தை நீக்கி, புதிய வரைபடம் கொண்டு வருவதற்கு ஐநா அவையில் இந்தியா ஆதரவளித்தது.
16 ஆம் நூற்றாண்டில் கடல்வழி பயணங்களுக்காக மெர்கேட்டர் உலக வரைபடத்தை 1569-ல் ஜெரார்டஸ் மெர்கேட்டர் உருவாக்கினார்.
ஆனால், இந்த வரைபடத்தில் பூமத்திய ரேகையிலிருந்து தொலைவிலிருக்கும் நிலப்பரப்புகளை நிஜ அளவைவிடப் பெரிதாகக் காட்டியது. ஆப்பிரிக்காவை விட 14 மடங்கு சிறியதான கிரீன்லாந்தை, ஆப்பிரிக்காவின் அதே அளவில் காட்டியது. அதேபோல், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா பகுதிகள் அளவுக்கு அதிகமாகப் பெரிதாகக் காட்டப்பட்டு வந்தன.
இந்த நிலையில்தான், பழைய மெர்கேட்டர் வரைபடத்துக்குப் பதிலாக, இனிவரும் காலங்களில் புதிய ஈக்வல் உலக வரைபடத்தைப் பயன்படுத்த ஐநா அவை முடிவு செய்தது.
2018-ல் வரைபடக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ஈக்வல் வரைபடம், அனைத்து கண்டங்கள், நாடுகளின் சரியான பரப்பளவை சரியான விகிதத்தில் துல்லியமாகக் காட்டுகிறது. இதன் மூலம், ஆப்பிரிக்க கண்டம் முன்பைவிட பெரியதாகவும், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா பகுதிகள் அவற்றின் நிஜமான சரியானதாக சிறிய அளவிலும் காட்டப்படுகின்றன.
இதனால், உலகெங்கிலும் அனைவருக்கும் உலக அமைப்பைப் பற்றிய சரியான புவியியல் பார்வையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தீர்மானத்தையும் ஐநா அவையில் கொண்டுவரப்பட்டது.
ஐநா அவையில் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானத்துக்கு இந்தியா உள்பட 164 நாடுகள் ஆதரவளித்தன. தீர்மானத்துக்கு எதிராக அமெரிக்கா மட்டும் வாக்களித்தது.
அதே நேரம், இந்த வாக்கெடுப்பில் எஸ்டோனியா, ஜார்ஜியா, லிதுவேனியா, மால்டோவா, செர்பியா, உக்ரைன் ஆகிய 6 நாடுகளும் பங்கேற்கவில்லை.
ஐநா அவையில் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானமானது கட்டாயச் சட்டம் அல்ல என்றபோதிலும், இனிவரும் காலங்களில் கல்வி நிறுவனங்கள், வரைபட நிறுவனங்கள், டிஜிட்டல் தளங்களில் இந்த புதிய வரைபடத்தைப் பயன்படுத்த ஊக்குவிப்படுகின்றன.

