பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1980ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் இணைந்து, பாஜகவை தோற்றுவித்த தலைவர்களுள் எல்.கே.அத்வானி முக்கியமானவர். இளம் வயதிலேயே ஆர்.எஸ்.எஸ்.-ல் தன்னை இணைத்துக் கொண்ட அத்வானி, நாடு முழுவதும் ரத யாத்திரை நடத்தி பாஜகவின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்.
வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில், நாட்டின் ஏழாவது துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்தவர்.
அண்மைக்காலமாக பாஜகவில் அத்வானிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும், அவர் ஓரங்கட்டப்படுவதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அவருக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், நாம் வாழும் காலத்தில் மிகவும் மதிக்கப்படும் அரசியல்வாதிகளில் ஒருவர் அத்வானி என புகழாரம் சூட்டியுள்ளார்.
சாதாரண அடிமட்ட தொண்டனாக வாழ்வை தொடங்கி துணைப் பிரதமராக உயர்ந்தவர் அத்வானி எனக் குறிப்பிட்டுள்ள பிரதமர், தேசத்தின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பது மகத்தானது என தெரிவித்துள்ளார்.
பல்வேறு செறிவான கருத்துகளை நாடாளுமன்ற உரையில் வெளிப்படுத்தியவர் அத்வானி என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

