தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பிரேசில். இந்த நாட்டின் சாண்டா கடரினா மாகாணம் மிகவும் பிரபலமான சுற்றுலா தளமாக திகழ்கிறது. இந்த மாகாணத்தில் உள்ள பிரயா கிராண்டி பகுதியில் ஹாட் ஏர் பலூனில் (வெப்ப காற்று பலூன்) வானில் பயணிப்பதை சுற்றுலா பயணிகள் வாடிக்கையாக வைத்துள்ளனர். அதன்படி, பிரயா கிராண்டில் 21 பயணிகள் இன்று காலை ஏர் பலூனில் வானில் பயணம் மேற்கொண்டனர்.
நடுவானில் ஏர் பலூன் பறந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அதில் தீப்பற்றியது. இதனால், ஏர் பலூன் வெடித்து வானில் இருந்து கீழே விழுந்தது. இந்த சம்பவத்தில் ஏர் பலூனில் பயணம் செய்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற 13 பேர் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

