உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி 326 ரன்கள் குவித்துள்ளது. தனது பிறந்த நாளான இன்று விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். ஒருநாள் போட்டிகளில் கோலி விளாசும் 49 ஆவது சதமாக இது அமைந்தது. 3 ஆவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் அமைத்த விராட் கோலியும் ஷ்ரேயாஸ் ஐயரும் 134 ரன்கள் சேர்த்தனர்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்காளக ரோஹித் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களத்தில் இறங்கினர். டி20 மேட்ச்சைப் போல் விளையாடிய ரோஹித் சர்மா 24 பந்துகளில் 2 சிக்சர் 6 பவுண்டரியுடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 23 ரன்னில் வெளியேற, இந்திய அணி 10.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் எடுத்திருந்தது.
பின்னர் இணைந்த விராட் கோலி – ஷ்ரேயாஸ் ஐயர் இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. விக்கெட்டை காப்பாற்றுவதற்கு இந்த இணை முக்கியத்துவம் கொடுத்ததால் ரன் குவிப்பு வேகம் கணிசமாக குறைந்தது. 87 பந்துகளை எதிர்கொண்ட ஷ்ரேயாஸ் 2 சிக்சர் மற்றும் 7 பவுண்டரியுடன் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி தனது 49 ஆவது சதத்தை தனது பிறந்த நாளன்று அடித்து அசத்தினார்.
கடைசி ஓவர்களில் ரவிந்திர ஜடேஜா அதிரடியாட்டத்தை கையில் எடுக்க இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 326 ரன்கள் குவித்தது.

