மியான்மரில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,886 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. புதன்கிழமை காலை நிலவரப்படி, பூகம்பத்தால் 4,639 பேர் காயமடைந்துள்ளனர், மேலும் 373 பேர் காணாமல் போயுள்ளனர். இதற்கிடையில், அண்டை நாடான தாய்லாந்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன. 72 பேர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. மியான்மரில் 7.7 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டு ஐந்து நாட்கள் கடந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. இதற்கிடையில், தலைநகர் நேப்பிடாவில் உள்ள ஒரு ஹோட்டல் இடிபாடுகளில் இருந்து புதன்கிழமை ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். இந்த சூழ்நிலையில், மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான தடைகளை அகற்றவும், உதவி செய்யும் அமைப்புகளுக்கு எதிரான தடைகளை நீக்கவும் ராணுவ அரசாங்கத்திடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

